Skip to content

ஆளுநரின் உரை Cut, Copy, Paste….என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு; வெற்று வாக்குறுதிகளின் தொகுப்பு என்றும் விமர்சனம்!

சென்னை,ஜூன்.18; தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரை, வெற்று வாக்குறுதிகளின் தொகுப்பு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். “இது பார்ப்பதற்கு தங்கம் போல மின்னும், ஆனால் உள்ளே வெறும் தகரம் தான்” என்று தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் காரசாரமாக சாடியுள்ளார்.

பழைய உரைகளின் ‘கட், காப்பி, பேஸ்ட்’ (Cut, Copy, Paste)

ஆளுநர் உரையில் மாநில உரிமைகள், சமூக நீதி, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் எனப் பல கவர்ச்சிகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் முந்தைய ஆளுநர் உரைகளின் நகல்களாகவே இருப்பதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது, உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது போன்ற எந்தவொரு முக்கியமான கோரிக்கைக்கும் இந்த அரசு புதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இருமொழிக் கொள்கை

பேரறிஞர் அண்ணாவின் வரிகளோடு தொடங்கிய ஆளுநர் உரையில், இந்தியாவின் பொதுத் தொடர்பு மொழி குறித்த அவரது முழுமையான வாதம் மறைக்கப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

“மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்றாவது மொழியைக் கற்பதற்குத் தடையாக இருக்கும் ‘இருமொழிக் கொள்கை’யையே இந்த அரசு தொடர்ந்து ஆதரிப்பது மற்றும் தேசிய கல்விக் கொள்கையை ஆராயாமல் எதிர்ப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் உலகளாவிய எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல் என்று தினகரன் குறை கூறியுள்ளார்.

“அண்டை மாநிலங்களின் அச்சுறுத்தலும், காங்கிரஸின் பிடியும்”

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டத் துடிக்கும் கர்நாடக அரசு மற்றும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட நினைக்கும் கேரள அரசுக்கு எதிராக இந்த தவெக அரசு வலுவான கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை. இதற்குக் காரணம், தவெக அரசு தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்குப் பின்பலமாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மீது வைத்துள்ள விசுவாசமே என்று தினகரன் விமர்சித்துள்ளார்.

மாநில உரிமைகளை விட ஆட்சியைக் காப்பாற்றுவதே தவெகவுக்கு முக்கியமாகப் போய்விட்டது என்பது இதன் மூலம் தெளிவாகிறது என சாடியுள்ளார்.

கேலிக்கூத்தாகும் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு

கடந்த ஒரு மாத கால தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட டிடிவி தினகரன், ஆளுநர் உரையில் “பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் லட்சியம்” எனக் குறிப்பிட்டிருப்பது அப்பட்டமான கேலிக்கூத்து என்று எள்ளி நகையாடி உள்ளார்.

நிறைவேற்ற முடியாத வெற்று முழக்கங்கள்

இறுதியாக, தமிழ்நாடு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்குத் தேவையான சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பது குறித்து இந்த உரையில் தெளிவான செயல்திட்டம் இல்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தவெக அரசு தயாரித்த இந்த ஆளுநர் உரை என்பது மக்களிடம் நிறைவேற்ற முடியாத வெற்று வாக்குறுதிகளை அள்ளிவீசும் ஒரு வெற்று ஆவணம் மட்டுமே என்று டிடிவி தினகரன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *