Skip to content

சிவசேனா அதிருப்தி எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்ரே வலியுறுத்தல்; பின்னணியில் பெரிய சதி இருப்பதாக குற்றச்சாட்டு!

மும்பை,ஜூன்.29; மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. சிவசேனா (UBT) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான முகாமில் இணைந்த 6 மக்களவை எம்பிக்களை (MPs) உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

பர்பானியில் (Parbhani) நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த கட்சித் தாவலுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் சதி இருப்பதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு உத்தவ் தாக்கரே விடுத்த கோரிக்கை

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த 6 எம்பிக்கள், திடீரென ஆளுங்கட்சி முகாமிற்குத் தாவினர். இதுகுறித்துப் பேசிய உத்தவ் தாக்ரே,”இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்று ஒன்று இருந்தால், இந்த 6 எம்பிக்களும் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். நான் இன்னும் மக்களவை சபாநாயகர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். சபாநாயகர் சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால், அவர் மற்றவர்களைப் பின்பற்றச் சொல்ல முடியாது. நாங்கள் அவரது அதிகாரத்தை மதிக்கிறோம், அவரது தனிப்பட்ட விருப்பங்களை அல்ல” என்று மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உத்தவ் தரப்பு எம்பிக்கள் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளனர்.

‘ஆபரேஷன் தேவேந்திரா’ – தாக்கரேவின் புதிய அரசியல் குண்டு!

இந்த கட்சித் தாவல் வெறும் சாதாரண அரசியல் மாற்றம் அல்ல என்று கூறிய உத்தவ் தாக்கரே, இதற்குப் பின்னால் “ஆபரேஷன் தேவேந்திரா” (Operation Devendra) என்ற ஒரு பெரிய அரசியல் விளையாட்டு ஒளிந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பாஜகவின் மத்திய தலைமை, மகாராஷ்டிர மாநிலத் தலைவர்களின் (குறிப்பாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின்) செல்வாக்கைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த அதிருப்தி எம்பிக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் உத்தவ் தாக்ரே குற்றஞ்சாட்டினார். மாநிலத் தலைவர்களின் இறக்கைகளை வெட்டுவதில் பாஜக கைதேர்ந்தது என்றும் அவர் சாடினார்.

‘பாபர் ஜனதா கட்சி’ – பாஜக மீது கடுமையான சாடல்

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரத்தை கையில் எடுத்த உத்தவ் தாக்ரே, பாஜகவை “பாபர் ஜனதா கட்சி” என்று கடுமையாக விமர்சித்தார். “பாபர் ராமர் கோவிலை இடித்தார். ஆனால் இந்த பாபர் ஜனதா கட்சி, புதிதாகக் கட்டப்பட்ட கோவிலைக் கொள்ளையடிக்க வந்துள்ளது. இவர்களுக்கும் பாபருக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தலின் போது மோடி அலைக்கு எதிராக வாக்களித்து வெற்றி பெற்ற எம்பிக்கள், தற்போது தனியார் விமானங்களில் வலம் வருவதைச் சுட்டிக்காட்டி, அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும், விவசாயிகளின் துயரங்களைப் புறக்கணிப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

உத்தவ் தாக்ரேவின் பேச்சால் மகாராஷ்டிரா அறசியலில் பரபரப்பு

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், உத்தவ் தாக்ரேவின் இந்த அதிரடிப் பேச்சு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விதிமுறைகளின்படி சபாநாயகர் ஓம் பிர்லா இந்த எம்பிக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்தே சிவசேனா (UBT) கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும். கட்சித் தாவல் தடையும், அரசியல் சதிகளும் இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கியுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *