தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும், பல தலைமுறை கலைஞர்களை உருவாக்கிய சினிமா மேதையுமான இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. நெகிழ்ச்சியான வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த என் ஆசிரியர் கே. பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கே. பாலசந்தர் தமிழ் சினிமாவில் பல புதுமையான கதைகளையும், சமூகப் பார்வையுடன் கூடிய திரைப்படங்களையும் உருவாக்கியவர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
கமல்ஹாசன் தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே கே. பாலசந்தரை தனது குருவாக மதித்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவரைப் பற்றிய தனது மரியாதையையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள இந்த வாழ்த்து, குரு-சிஷ்ய உறவின் ஆழத்தையும் தமிழ் சினிமாவின் மரபையும் நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
