Skip to content

கரூர் அரசு வேலை நியமனம் விவகாரம்: ‘TNPSC தேர்வர்களின் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும்?’ – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய அரசின் முடிவை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், அதற்கு பதிலாக தனிப்பட்ட நிதி உதவி வழங்கியிருக்கலாம் என்றும், TNPSC தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு அரசு வேலை வழங்கிய முடிவு அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், அரசு வேலை நியமனத்தை விமர்சித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், அரசு பணியிடங்கள் பொதுப் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட வேண்டியவை என்பதால், அவற்றை நேரடியாக வழங்குவது TNPSC தேர்வுகளுக்காக பல ஆண்டுகளாக உழைத்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாய்ப்பை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இத்தனை ஆண்டுகளாக கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறீர்களே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கலாம். ஆனால், அரசு வேலை வழங்கி TNPSC தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் கேள்வி” என்று அவர் கூறினார்.

அத்துடன், “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாகத்தான் இந்த நடவடிக்கை உள்ளது” என்றும் விமர்சித்த ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றாலும், அது பொதுமக்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் நிதியுதவி உள்ளிட்ட நிவாரணங்களை அறிவித்தது. இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு வேலை வழங்கும் நடைமுறை, சமூகநீதி, மனிதநேயம் மற்றும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை ஆகியவை தொடர்பாக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *