கோவா தீ விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். துயர நிகழ்வு பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முர்மு, வடக்கு கோவா மாவட்டத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்த துயரமான தீ விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடினமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மனவலிமை பெற வேண்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் திரௌபதி முர்மு கூறியிருக்கிறார். கோவா சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் தனது எண்ணங்கள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் மோடி பதிவிட்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘கோவாவில் நிகழ்ந்தது தீ விபத்து அல்ல, கொலை’ என்று குறிப்பிட்டுள்ளார். தீ தடுப்பு பாதுகாப்பு குறைபாடுகளால்தான் இத்தனை உயிர்கள் பறிபோய்விட்டதாக ராகுல் கூறியுள்ளார். முழுமையான விசாரணை மூலம் நிகழ்வுக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தி உள்ளார். இதனிடையே, தீ விபத்து நேரிட்ட நைட் கிளப்பை கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு செய்தார். நைட் கிளப் நிர்வாகம் தீ பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார். தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் முதலமைச்சர் சாவந்த் தெரிவித்தார்.
