Skip to content

கண்ணகி நகர் தீ விபத்து; மின்வாரியப் பணியிடங்களை நிரப்ப மீண்டும் கோரிக்கை!

சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய (TNUHDB) குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர். இப்பகுதியில் மின்சார விபத்துகள் தொடர்ந்து நடந்தபோதும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தின் (TNPDCL) துரைப்பாக்கம் மற்றும் எழில் நகர் துணை மின் நிலையங்களில் உள்ள மொத்தம் ஆறு தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணியிடங்களும் (ஒவ்வொன்றிலும் மூன்று) நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்பதே இதற்குக் காரணம்.

குடியிருப்புகளை அச்சுறுத்தும் தீ விபத்தும், முந்தைய உயிரிழப்பும்

சமீபத்தில், கண்ணகி நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் மின் வயரிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், குடியிருப்பாளர்கள் மிக மோசமான விளைவுகளை எண்ணி அஞ்சுகின்றனர்.

தீ விபத்தை முதன்முதலில் நேரில் பார்த்த 74 வயது கஸ்தூரி, “இது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. மற்ற குடியிருப்புத் தொகுதிகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ளன. பாதுகாப்புக் கவசங்கள் இன்றி தரையில் அல்லது வெளியில் இருக்கும் மின் கம்பிகளில் இருந்து அடிக்கடி தீப்பொறிகள் வருவதைப் பார்க்கிறோம்” என்று கவலை தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம், கண்ணகி நகரில் சேதமடைந்த மின்சார கேபிளில் தவறுதலாக மிதித்ததன் காரணமாக, குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவரான 30 வயது துப்புரவுத் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நிரப்பப்படாத காலியிடங்களும் அதிகாரிகளின் உறுதிமொழியும்

முன்னாள் அதிமுக கவுன்சிலர் டி.சி. கருணா, நவம்பர் 25 அன்று மாநிலம் முழுவதும் 1,660 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டாலும், கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் துணை மின் நிலையங்களில் ஒருவரும் பணியமர்த்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில், ஒரு உயிரிழப்பு ஏற்பட்ட பின்னரும் கூட, அனைத்து தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது அலட்சியத்தைக் காட்டுகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

பிரச்னைக்குத் தீர்வுகாண விரைவில் நடவடிக்கை என உறுதி

இதுகுறித்து TNPDCL அதிகாரி ஒருவர் விளக்கமளிக்கும்போது, “சமீபத்திய ஆட்சேர்ப்பு மாநிலம் முழுவதும் சுமார் 50% காலியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. எனினும், துரைப்பாக்கம் மற்றும் எழில் நகர் பகுதிகளுக்கு கூடுதலாக ஐந்து தொழில்நுட்ப உதவியாளர்கள் தேவை என்று தலைமை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், அடுத்த திங்கட்கிழமைக்குள் ஐந்து தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *