சீனாவைச் சேர்ந்த பில்லியனர் ஸூ போ (Xu Bo), வாடகைத் தாய் முறையில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க வம்சாவளி குழந்தைகளைப் பெற்றுள்ளார். ஒரு பிரமாண்டமான
குடும்ப சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் இந்தப் பிள்ளைகளைப் பெற்றதாகவும், எதிர்காலத்தில் அவர்களை எலான் மஸ்க் (Elon Musk) வாரிசுகளுடன் திருமணம் செய்து வைக்க கனவு காண்பதாகவும் ஸூ போ கூறியதாக ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது.
யார் இந்த ஸூ போ? ‘சீனாவின் முதல் தந்தை’யின் லட்சியம் என்ன?
48 வயதான ஸூ போ, பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான ‘டுவோயி’ (Duoyi)-யின் நிறுவனர் ஆவார். இவர் தன்னைத் தானே “சீனாவின் முதல் தந்தை” என்று அழைத்துக் கொள்கிறார்.
அமெரிக்காவில் உள்ள வாடகைத் தாய் ஏஜென்சிகள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில், அவர் “50 உயர் தரமான மகன்களை” பெற வேண்டும் என்று பொதுவெளியில் தெரிவித்திருந்தார். மகன்கள்தான் தமது வணிகத்தை எடுத்து நடத்த சிறந்தவர்கள் என்று அவர் நம்புவதால், குறிப்பாக ஆண் குழந்தைகளை நோக்கியே இவரது கவனம் இருந்தது.
வாடகைத் தாய் மூலம் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்
ஸ்கூ போ-வின் முன்னாள் காதலியான டாங் ஜிங், ஸூ போ-வுக்கு 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கலாம் என்று கூறி சீன சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதில் 11 குழந்தைகளை தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, ஸூ போ மற்றும் டாங் ஜிங் இருவரும் பொதுவான இரண்டு மகள்களின் உரிமைக்காக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2022-ல் ஸூ போ-வுடன் இணைக்கப்பட்ட ஒரு சமூக ஊடக கணக்கில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோவில், ஒரு மாளிகையில் பல டஜன் இளம் சிறுவர்கள் கேமராவை நோக்கி ஓடி வந்து, சீன மொழியில் ‘அப்பா!’ என்று அழைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எலான் மஸ்க்கின் வாரிசுகளுடன் சம்பந்தம்: நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
தமது குடும்ப வம்சத்தை உருவாக்குவதற்கான ஸூ போ-வின் வேட்கைக்கு, பல குழந்தைகளைப் பெற்ற எலான் மஸ்க் ஒரு உத்வேகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் தனது வாரிசுகளை எலான் மஸ்க் குழந்தைகளுடன் திருமணம் செய்து வைத்து ஒரு பெரிய குடும்ப சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்று ஸூ போ தனது சமூக ஊடகப் பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிச்சத்திற்கு வந்த வாடகைத்தாய் தொழில்முறையின் சட்டச்சிக்கல்
2023 கோடையில், கலிபோர்னியாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில், ஸூ போ பிறக்காத நான்கு குழந்தைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் பிறந்த எட்டு குழந்தைகள் உட்பட பலருக்கான பெற்றோர் உரிமையைப் பெற மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது லட்சியத்தைக் கேள்விப்பட்ட நீதிபதி அவரது மனுவை உடனடியாக நிராகரித்தார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அமெரிக்காவில் வசதிபடைத்த சீன தொழிலதிபர்கள் அமெரிக்க குடியுரிமை கொண்ட குழந்தைகளைப் பெறப் பயன்படுத்தும் வாடகைத் தாய் தொழில்துறையின் சட்டச் சிக்கல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
