Skip to content

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை மீட்கப் போராடும் காங்கிரஸ்; ஜனவரி 5 முதல் நாடு தழுவிய இயக்கம்!

டெல்லி,டிச.27; மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இத்திட்டத்தைப் பாதுகாக்க’ MGNREGA’ மீட்பு இயக்கம் என்ற போராட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

MGNREGA ரத்து; ஏழைகளின் உரிமைகள் மீதான தாக்குதல்

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “MGNREGA என்பது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல, அது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள ‘வேலை செய்யும் உரிமை’ (Right to Work). இந்தச் சட்டத்தை ரத்து செய்வது மகாத்மா காந்தியை அவமதிப்பதாகும்” என்று கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய VB-G RAM G சட்டமானது, ஏழைகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சி என்றும், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றும் ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் அவர் விமர்சித்தார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

டெல்லி இந்திரா பவனில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

ஜனவரி 5 முதல் போராட்டம்: நாடு முழுவதும் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார்: தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து ‘வாக்கு திருட்டு’ வேலையில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். குறிப்பாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் பெயர்கள் நீக்கப்படுவதைத் தடுக்க காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாய சட்டங்கள் பாணி போராட்டம்: கடந்த காலங்களில் நில கையகப்படுத்தும் சட்டம் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை அரசு பின்வாங்கியது போல, இந்தப் போராட்டத்தின் மூலம் MGNREGA சட்டத்தையும் மீண்டும் கொண்டு வர முடியும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட கார்கே, இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொடர்புடைய அமைப்புகள் நடத்திய தாக்குதல்கள் நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதாகக் கண்டனம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *