ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி – எண் 217
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் தொகுதி 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் பொதுத்தொகுதியாக இருந்து, 1967ஆம் ஆண்டு தனித்தொகுதியானது.
இந்த தொகுதி 1962 முதல் இதுவரை ஒரு இடைத்தேர்தல் உள்பட 14 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளன.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, 1996 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இந்திய கம்யூனிஸ்ட், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக பட்டியலினத்தவர் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மறவர், நாடார், பிள்ளைமார் ஆகிய சமூகத்தினர் இருக்கின்றனர்.
வரும் தேர்தலில், திமுகவில் தற்போதைய எம்எல்ஏ சண்முகையா மீண்டும் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. இவர் தவிர, காசி விஸ்வநாதன், இளையராஜா ஆகிய முக்கிய பிரமுகர்களும் சீட் கேட்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், சின்னத்துரை, கவியரசன், கோசல்ராம் ராஜா ஆகியோர் சீட் கேட்கின்றனர். இவர்களில் மோகன், 2021 தேர்தலில் 63,600 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.
கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.சுப்புலட்சுமி 22,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
விஜய்யின் தவெக அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனப் பேசிக் கொள்கின்றனர். விஜய்யின் வருகையால் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.