டெக்சாஸ், ஜன.24; அமெரிக்காவின் பெரும் பகுதியை ஒரு சக்திவாய்ந்த பனிப்புயல் (Winter Storm) தாக்கி வருகிறது. ஆர்க்டிக் காற்றினால் உருவான இந்த கடும் குளிரும், பனிப்பொழிவும் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹாமா முதல் பாஸ்டன் வரை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
டெக்சாஸ் மற்றும் ஓக்லஹாமாவில் கடும் பனிப்பொழிவு
வெள்ளிக்கிழமை காலை (23.01.2026) முதல் வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹாமா சிட்டி பகுதிகளில் கனமழை மற்றும் பனி பெய்து வருகிறது. ஓக்லஹ்மா சிட்டியில் மட்டும் சுமார் 12 அங்குலத்திற்கும் அதிகமான பனி குவியக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸில் நிலவும் இந்த மோசமான வானிலை, 2021-ல் ஏற்பட்ட பேரழிவு தரும் பனிப்புயலை நினைவூட்டுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல இடங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பனிப் பொழிவால் சுமார் 2,000 விமானங்கள் ரத்து
பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் வான்வழி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய விமான நிலையங்களான டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் (DFW) மற்றும் ஹூஸ்டன் ஆகியவற்றில் சுமார் 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி உறைந்துள்ளதால், வாகனங்களை ஓட்டுவது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு மற்றும் அவசரநிலை
கடும் காற்று மற்றும் உறைபனி காரணமாக மரங்கள் சரிந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் டெக்சாஸ், லூசியானா மற்றும் புளோரிடா உள்ளிட்ட மாநிலங்களில் 1,32,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர். ஜார்ஜியா, லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் ஃபுளோரிடா போன்ற மாநிலங்களின் ஆளுநர்கள் அவசர நிலையை அறிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
உறைபனி காரணமாகச் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், விபத்துகளைத் தவிர்க்கப் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாகச் சிகாகோ போன்ற நகரங்களில் மைனஸ் 35 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர் நிலவுவதால், மாணவர்கள் வெளியே வருவது ஆபத்தானது எனக் கருதி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இயல்புநிலை திரும்ப சில காலம் ஆகலாம்
இந்த பனிப்புயல் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நோக்கியும் இந்தப் புயல் நகர வாய்ப்புள்ளதால், மக்கள் போதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயற்கை சீற்றத்தின் பிடியில் சிக்கியுள்ள அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில காலம் ஆகலாம்.
