தியாகராய நகர் (தொகுதி எண் – 24)
சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் தொகுதி, கடந்த 1957 தொடங்கி இதுவரை 15 முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.
இதில் ஐந்து முறை திமுகவும், நான்கு முறை அதிமுகவும், காங்கிரஸ் மூன்று முறையும், அதிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக உருவான கா.கா.தே.கா. ஒரு முறையும், த.மா.கா ஒரு முறையும் வென்றுள்ளன.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் வென்ற தொகுதி
சிலம்புச் செல்வர் என போற்றப்படும் ம.பொ.சிவஞானம் தமிழரசுக் கழகம் சார்பில் ஒரு முறை தேர்வானார்.
இத்தொகுதியில் பிராமணர்கள், வன்னியர்கள், பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கின்றனர்.
2021-ல் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக
தற்போதைய திமுக எம்எல்ஏவான ஜெ.கருணாநிதி சீட் பெற மீண்டும் முனைகிறார். அதேவேளையில், உதயநிதி மூலம் சீட் பெற தென்மேற்கு இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகனும் முட்டி மோதுகிறார்.
அதிமுகவில் கடந்த முறை நூலிழையில் வெற்றி பெற்ற வாய்ப்பை இழந்த ப.சத்தியநாராயணனுக்கு தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என பேசப்படுகிறது.
பாஜக சார்பில் போட்டியிட பிரபலங்கள் முனைப்பு
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினரும் இத்தொகுதியை கேட்டுப்பெற முட்டி மோதுகின்றனர். அக்கட்சியின் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் தீவிர முயற்சியில் உள்ளனர்.
கடந்த நான்கரை ஆண்டுகளில், தொகுதியில் பெரியளவில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் திமுக எம்எல்ஏ ஜெ.கருணாநிதி மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
ஜெ.கருணாநிதி மீது அதிருப்தி; ஆனாலும், கட்சி பலம் உண்டு!
ஆயினும், கட்சியின் கட்டமைப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் கருணாநிதிக்கு பிளஸ் பாயின்ட்டுகள்.
2021 தேர்தலில் ஜெ.கருணாநிதி 56,035 வாக்குகளையும், அதிமுகவின் ப.சத்தியநாராயணன் 55,898 வாக்குகளையும் பெற்றனர். வெற்றி வாக்கு வித்தியாசம் வெறும் 137 தான். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட பழ.கருப்பையாவுக்கு 14,567 வாக்குகள் கிடைத்தன.
வெற்றி யாருக்கும் எளிதல்ல என்பதே கள நிலவரம்
இம்முறை புதுவரவான தவெக- வும் களத்தில் குதிக்க இருப்பதால், முக்கிய கட்சிகளின் வாக்குகள் கணிசமாக குறையும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், தியாகராய நகர் தொகுதியில் திமுக- அதிமுக இடையேதான் போட்டி நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.