கூடலூர் தொகுதி (எண் – 109)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தொகுதி, 1967 தொடங்கி இதுவரை 13 முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.
இதில் காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 6 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு பட்டியலினத்தவர் கணிசமாக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தாயகம் திரும்பிய தமிழர்கள், மலையாள மொழி பேசும் மக்கள், இஸ்லாமியர்கள் என பரவலாக வாழ்கின்றனர்.
அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் தனிக்காட்டு ராஜாவா?
அதிமுகவைப் பொறுத்தவரையில் ஒன் மேன் ஆர்மியாக வலம் வரும் தற்போதைய எம்எல்ஏவான பொன் ஜெயசீலன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். முன்னாள் எம்எல்ஏ கருப்புசாமியும் சீட்டுக்கு அடிபோடுகிறார்.
திமுகவில் ஆ.ராசாவின் நெருங்கிய உறவினரான பரமேஸ் குமார், முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி, பந்தலூர் மத்திய ஒன்றியச் செயலாளரான மாங்கோடு ராஜா ஆகியோர் தேர்தல் களம் காண ஆர்வம் கொண்டுள்ளனர்.
தவெகவின் நுழைவு -தள்ளாடும் அரசியல் கட்சிகள்
முந்தைய தேர்தலில் பொன். ஜெயசீலன் 64,000 வாக்குகள் பெற்றார். இவர், திமுக வேட்பாளரான எஸ்.காசிலிங்கத்தை 1,945 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நாம் தமிழர் கட்சியின் கேதீசுவரனுக்கு சுமார் 7,000 வாக்குகள் கிடைத்தன.
வரும் தேர்தலில், தவெகவின் வருகையால் அனைத்துக் கட்சிகளுமே வாக்குகளை இழக்கும் என்பதுதான் கணிப்பு.
இவற்றையும் மீறி, அதிமுக – திமுக இடையேதான் நேரடிப் போட்டி ஏற்படும் எனக் கூறப்படுகிறது.