சென்னை,பிப்.07; தமிழ்நாட்டில் இன்றும் 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.
கூட்டணிப் பேச்சு, தொகுதிப் பங்கீடு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிதல் என அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றன.
தேர்தலில் எப்போதுமே கதாநாயகனாகத் திகழ்வது தேர்தல் அறிக்கைகள் தான். அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு கனிமொழி எம்பி தலைமையில் முழுவீச்சில் இயங்கி வருகிறது.
தவெகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கென பொதுமக்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
அதிமுக இதுவரை அளித்துள்ள வாக்குறுதிகள் என்னென்ன?
எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 அறிவிப்புகளை இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. அதன்படி,
01) அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.2000 வழங்கும் குல விளக்கு திட்டம் செயல்படுத்தப்படும்.
02) நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்; ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் தொடரும்.
03) அம்மா இல்லத் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் வீடு இல்லாதோருக்கு, இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்; நகர்ப்புறங்களில் வீடு இல்லாதோருக்கு இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும். ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் செல்லும்போது இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
04) 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
05) மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் 5 லட்சம் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
06) முதியோர் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.
07) வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அத்தொகையை அரசே ஏற்கும்.
08) வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
09) ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும்
10) சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மகளிர் சுய தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.
