தபால்பா,பிப்.24; மெக்சிகோவின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) அமைப்பின் தலைவர் நெமேசியோ ரூபன் ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (Nemesio Rubén Oseguera Cervantes), ‘எல் மெஞ்சோ’ என்று அழைக்கப்படுபவர், மெக்சிகோ ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ராணுவத்தின் அதிரடி வேட்டை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) ஜாலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா (Tapalpa) பகுதியில் மெக்சிகோ ராணுவம் நடத்திய துல்லியமான தாக்குதலில் எல் மெஞ்சோ கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளாலும் தேடப்பட்டு வந்த இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்கா 15 மில்லியன் டாலர் வெகுமதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெடித்தது வன்முறை; கொழுந்துவிட்டு எரியும் மெக்சிகோ
எல் மெஞ்சோவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கார்டெல் உறுப்பினர்கள் மெக்சிகோ முழுவதும் பயங்கரமான வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட சாலை மறியல்கள் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகள் மற்றும் லாரிகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். குறிப்பாக புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) விமான நிலையத்தில் மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்கா – கனடா நாடுகளின் எதிர்வினை
இந்த அசாதாரண சூழ்நிலையால், கனடா தனது விமானச் சேவைகளை புவேர்ட்டோ வல்லார்ட்டாவிற்கு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்கா தனது நாட்டு குடிமக்களைப் பாதுகாப்பு கருதி ஜாலிஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகை, இந்த நடவடிக்கையில் உளவுத்துறை ரீதியாக மெக்சிகோவிற்கு உதவியதை உறுதிப்படுத்தியுள்ளது.
எல் மெஞ்சோ என்பவர் யார்?
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG), மெக்சிகோவின் அதிவேகமாக வளர்ந்த ஒரு குற்றவியல் அமைப்பாகும். ஃபெண்டானில் (Fentanyl) மற்றும் கோகைன் போன்ற போதைப்பொருட்களை அமெரிக்காவிற்கு பெருமளவில் கடத்துவதில் இந்த அமைப்பு முன்னணியில் இருந்தது. 2025 ஆம் ஆண்டு, டிரம்ப் நிர்வாகம் இந்த அமைப்பை ‘வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு’ என்று முத்திரை குத்தியது.
முக்கிய தலைவன் கொலையால் அதிகாரப் போட்டி உருவாக வாய்ப்பு
மெக்சிகோவின் போதைப்பொருள் போரில் எல் மெஞ்சோவின் மரணம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு முக்கியத் தலைவரின் வீழ்ச்சி கார்டெல் அமைப்புகளுக்குள் அதிகாரப் போட்டியை உருவாக்கி, வன்முறை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது மெக்சிகோ அரசு நிலைமையை சீர்செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
