சென்னை,பிப்.25; தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதேபோன்று புதுச்சேரி (ஜூன் 15), மேற்குவங்கம் (மே 7), அசாம் (மே 20), கேரளம் (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் நிறவடைகிறது.
எனவே, இந்த 5 மாநிலங்களிலும் உள்ள 824 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
5 மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் தொடர் ஆலோசனை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐந்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் வன்முறை அவ்வளவாக நிகழ்வதில்லை என்பதால், எப்போதும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். வடமாநிலங்களில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன.
2021ஆம் ஆண்டில் ஏப்ரலில் தேர்தல்; மே மாதம் வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 7ஆம் தேதி தான் நடத்தப்பட்டது.
ஆனால், இம்முறை வெயிலின் தீவிரத்தை மனதில் கொண்டு மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்பது பற்றி தேர்தல் ஆணையம் யோசித்து உருவாக்கி கூறப்படுகிறது.
5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த திட்டம்?
ஏற்கனவே 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் கடைசி கட்டமாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 1952ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வந்தாலும், தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பிற்காலத்தில் பெரும்பாலும் மே மாதமே தேர்தல் நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணைய குழு இன்றிரவு சென்னை வருகை
அந்த வகையில், வரவிருக்கும் தேர்தலும் மே மாதம் நடத்தப்படலாம் என்று பேசப்படுகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் மாத மத்தியில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழலில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 15 அதிகாரிகள் அடங்கிய குழு இன்றிரவு (பிப்ரவரி 25) சென்னை வருகின்றனர்.
2 நாட்கள் முகாமிட்டு பல்வேறு கட்டங்களாக ஆலோசனை
நாளை முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
அப்போது, தேர்தல் அதிகாரிகள் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுடனும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
