Skip to content

மதுபானக் கொள்கை வழக்கு; அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ்சிசோடியா விடுவிப்பு – நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!


டெல்லி,பிப்.27; டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோரை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 27, 2026) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் கண்டனம்

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்தார்.

“சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை; வெறும் யூகங்களின் அடிப்படையில் இந்த வழக்கு கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 21 நபர்களையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

“கட்டார் ஈமான்தார்”-உணர்ச்சிவசப்பட்ட கெஜ்ரிவால்

தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கண்கலங்கினார். அவர் கூறுகையில், “நானும் மணிஷ் சிசோடியாவும் பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டோம்; எங்கள் மீது சேறு பூசப்பட்டது; இன்று நீதி வென்றுள்ளது; நான் ஒரு ‘கட்டார் ஈமான்தார்’ (உண்மையான நேர்மையாளர்) என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது” என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை மீது கேள்வி

வழக்கின் போக்கை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளது. ஒரு அரசு அதிகாரியை எந்தவித ஆதாரமும் இன்றி முதல் குற்றவாளியாக சேர்த்தது சட்டவிரோதமானது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அப்ரூவராக மாற்றி வாக்குமூலம் பெறுவது அரசியலமைப்பு கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய உண்மைகள்:

வழக்குப் பதிவு: ஆகஸ்ட் 2022-இல் சிபிஐ-யால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது: மணிஷ் சிசோடியா பிப்ரவரி 2023-இலும், கெஜ்ரிவால் மார்ச் 2024-இலும் கைது செய்யப்பட்டனர்.

தீர்ப்பு: 2026 பிப்ரவரி 27 அன்று அனைத்து 23 நபர்களும் விடுவிக்கப்பட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா மீதான இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டம், “சத்யமேவ ஜெயதே” (வாய்மையே வெல்லும்) என்ற வாசகத்துடன் ஆம் ஆத்மி தலைவர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *