டெஹ்ரான்,மார்ச்.01; மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டுத் தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள ஒரு சிறுமியர் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 40 மாணவிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்னப் நகரில் தாக்குதல்: நடந்தது என்ன?
தெற்கு ஈரானின் ஹார்முஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் உள்ள மின்னப் (Minab) நகரில் அமைந்துள்ள ஒரு சிறுமியர் ஆரம்பப் பள்ளி மீது நேற்று (பிப்ரவரி 28, சனிக்கிழமை) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானிய அரசு ஊடகமான IRNA செய்தியின்படி, இந்தத் தாக்குதலில் 5 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். எனினும், சில சர்வதேச ஊடகங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 40-க்கும் அதிகமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றன.
பள்ளிக்கு வந்த சில நிமிடங்களிலேயே பறிபோன பிஞ்சு உயிர்கள்
ஆனால், இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளிக்கு வந்து குழந்தைகளை விட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோருக்கு கிடைத்த தகவல் அவர்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்தது.
தாக்குதலுக்கு உள்ளான மின்னப் பகுதியில் ஈரானின் புரட்சிகர காவல்படையின் (Revolutionary Guard) தளம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. ராணுவ இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். ஈரான் ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ஈரானிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கவும், தற்போதைய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழவும் இது ஒரு வாய்ப்பு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரான் பதிலடி மற்றும் தற்போதைய சூழல்
தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா அண்டை நாடுகளிலும் பதற்றம் பரவியுள்ளது. விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்பாவி பள்ளி மாணவிகள் உயிரிழப்பு நெஞ்சை உலுக்கியுள்ளது
மத்திய கிழக்கில் தொடரும் இந்த மோதல் உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ராணுவ மோதல்களுக்கு இடையே அப்பாவிப் பள்ளி மாணவிகள் பலியாவது மனிதநேயமற்ற செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
