சென்னை,மார்ச்.18; கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில், டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் நேற்று (மார்ச் 17, 2026) தீவிர விசாரணை நடத்தினர்.
நாட்டையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பத்து ரூபாய் பாலாஜி எனப் பாடத்தொடங்கியதும் காலணி வீச்சு
கரூரில் பத்து ரூபாய் பாலாஜி என்ற விஜய் பாடத் தொடங்கியதும் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதாகவும், திருச்சி, நாமக்கல் என எங்கும் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் செல்லாத போலீசார், கரூரில் மட்டும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் தவெக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு முன்னதாக மருத்துவமனைக்குச் செந்தில் பாலாஜி நேரில் சென்றார் எனவும் தவெக குற்றச்சாட்டு வைத்து இருந்தது. சம்பவம் நடந்த அன்றிரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்நிலையில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை
இதன்படி, நேற்று (மார்ச் 17, செவ்வாய்) செந்தில் பாலாஜி சிபிஐ முன்பு ஆஜரானார். சுமார் 6 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீதே குற்றச்சாட்டை முன்வைத்து செந்தில் பாலாஜி பதில்களை அளித்ததாகக் கூறப்படுகிறது.
6 மணி நேரம் விசாரணை; விளக்கங்கள் வீடியோவாக பதிவு
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி அளித்த விளக்கங்கள் அனைத்தையும் சிபிஐ அதிகாரிகள் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில் விசாரணை நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி நேற்றிரவே சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கேட்கப்பட்ட கேள்விகளை பொதுவெளியில் கூற முடியாது
இதற்கு, கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு எதாவது சந்தேகங்கள் இருந்து இருக்கலாம். அந்த சந்தேகங்கள் அடிப்படையில் அழைத்து இருக்கலாம். அங்கே களத்தில் இருந்து பணியாற்றியதால் அதை பொறுப்பாக எடுத்துக்கொண்டு, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியிருக்கிறேன். சாட்சிகள் என்ற அடிப்படையில் அங்கு நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்விகளை முன்வைத்தார்கள். அந்த கேள்விகள் என்ன என்பதை பொதுவெளியில் சொன்னால் நன்றாக இருக்காது என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சிபிஐ விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டி வருமா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை எனவும் செந்தில் பாலாஜி கூறினார்.
