Skip to content

பிடிஆருக்கு செக் வைக்கப்போவது அதிமுகவா, அமமுகவா? ஆர்வத்துடன் எதிர்நோக்கும் திமுகவினர்! அதிரும் மதுரை!

மதுரை,மார்ச்.19; மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து களம் காணப்போவது அதிமுகவா அல்லது அமமுகவா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தேர்தல் வியூகம்

மதுரை மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்காகத் தொகுதி முழுவதும் தனது ஆதரவாளர்களைக் களம் இறக்கி, தேர்தல் பணிகளை அவர் முன்கூட்டியே தொடங்கிவிட்டார். கடந்த முறைகளைப் போலல்லாமல், இந்த முறை வாக்காளர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அவரது அணுகுமுறை உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தொகுதி முழுவதும் பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவின் உத்தேச வேட்பாளர்கள் யார்?

அதிமுக தரப்பில் இந்தத் தொகுதியைக் கைப்பற்றப் பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. அதன்படி சில முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் தற்போது அடிபடுகின்றன.

பேராசிரியர் ஜெயபால் (மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்)

கவுன்சிலர் முத்துமாரி (85-வது வட்டச் செயலாளர் ஜெயக்குமாரின் மனைவி – செல்லூர் ராஜூவின் ஆதரவு இவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது)

பி.எம். மன்னன் (முன்னாள் துணை மேயர்)

இதில் பி.எம். மன்னன் போட்டியிட்டால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவர் உள்ளாட்சித் தேர்தலில் முக்கியப் பதவியைக் குறிவைப்பதால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

உள்கட்சிப் பூசலால் திணறும் பிடிஆர்

வியப்பான விஷயம் என்னவென்றால், அதிமுக வேட்பாளர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள திமுகவினரே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் திமுகவுக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல் தான். பி.எம். மன்னன் போன்ற பழைய நிர்வாகிகள் களம் இறங்கினால், திமுகவில் அதிருப்தியில் உள்ளவர்கள் அவருக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அமமுகவின் தாக்கம் – டேவிட் அண்ணாதுரை?

அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை போட்டியிட்டால், அவர் பிடிஆர்-க்கு ஒரு வலுவான போட்டியாளராக இருப்பார் என்று பேசப்படுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும், அமமுகவின் செல்வாக்கும் இணைந்தால் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல்ராஜனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

பிடிஆரின் காலை வாரத் தயாராகின்றனரா திமுக உடன்பிறப்புகள்?

மதுரை மத்திய தொகுதி எப்போதும் ஒரு நட்சத்திரத் தொகுதியாகவே இருந்து வருகிறது. அமைச்சர் பிடிஆரின் தனிப்பட்ட செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பலமான வேட்பாளர் மற்றும் திமுகவின் உட்கட்சி விவகாரங்கள் இந்தத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும். அதிமுக தனது வேட்பாளரை அறிவிக்கும்போதுதான் கள நிலவரம் இன்னும் தெளிவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *