சென்னை,மார்ச்.19; திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டு அரசியலுக்கு புதுமுகமான கிறிஸ்டோபர் திலக் என்பவர், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.
இதனைத்தொடர்ந்து எந்தெந்த தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவது என்பதில் சில நாட்களாக மௌனம் நிலவி வந்தது.
போட்டியிடும் தொகுதிகள்; மேலிடப் பொறுப்பாளர்தான் பேச வேண்டும்
இதுபோன்ற சூழலில், தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து திமுக தலைமையுடன் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்தான் பேச வேண்டும் எனச் சத்தியமூர்த்தி பவனில் புதிய பஞ்சாயத்து ஒன்று வெடித்துள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் பேசப்படும் விசயங்கள் பின்வருமாறு:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது; கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; ஆனால், இந்த முறை 40 தொகுதிகள் வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தினர்; இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் கடும் இழுபறி நீடித்தது; இந்த விவகாரம் சோனியா காந்தியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே, ராகுல் காந்தி சமரச முடிவுக்கு வந்தார்.
சிதம்பரம் மூலம் பேசி முடித்ததில், கிரிஷ் சோடங்கர் அதிருப்தி
இருப்பினும், தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது 35 ஆக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உறுதியாக இருந்தார். இதனால் கூட்டணி முடிவாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான், ப.சிதம்பரம் மூலமாக காய் நகர்த்தி, கூட்டணியை செல்வப்பெருந்தகை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இதில் கிரிஷ் சோடங்கருக்கு துளியும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கிரிஷ் – செல்வப்பெருந்தகை இடையே மோதலும் வெடித்தது. இத்தகைய சூழலில்தான், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
பலவீனமான தொகுதிகளை காங்கிரசுக்கு தள்ளிவிட திமுக முயற்சி!
அக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள், “திமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகளை நமக்குத் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது, அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்தனர். ஆனால் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான பீட்டர் அல்போன்ஸோ, “திமுக எடுத்த சர்வேயில் சில சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்குச் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே திமுக கொடுக்கும் தொகுதிகளைப் பெற்றுக்கொள்வதுதான் வெற்றிக்குக் கைகொடுக்கும்” என்று அறிவுறுத்தினார். இது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியல் தயார்!
மேலும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் தொகுதிகளின் பட்டியலைத் தனியாக வழங்கியுள்ளனர். அந்தப் பட்டியலை முன்வைத்து கிரிஷ் சோடங்கர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல் வெடித்ததால், அங்கு தொகுதிகளை இறுதி செய்யும் பணிகளில் கிரிஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தச் சூழலைச் சாதகமாக்கி செல்வப்பெருந்தகை, திமுகவின் சர்வே முடிவுகளுக்குச் சாதகமாக இருக்கும் தொகுதிகளை வாங்கிவிடுவார் என ஒரு தரப்பினர் அஞ்சுகின்றனர். எனவே, “காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் கிரிஷ் சோடங்கர் தான் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என, டெல்லி தலைமைக்கு அவர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
