டெல் அவிவ்,மார்ச்.22; இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா (Dimona) அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு மிக அருகாமையில் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிமோனா மற்றும் ஆராத் நகரங்களில் பலத்த சேதம்
நேற்றிரவு (மார்ச் 21, சனிக்கிழமை) ஈரான் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா மற்றும் ஆராத் (Arad) ஆகிய நகரங்கள் இலக்கு வைக்கப்பட்டன. இந்த இரட்டைத் தாக்குதலில் கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, இந்த தாக்குதல்களில் குறைந்தது 180 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இஸ்ரேலின் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள டிமோனா நகருக்கு மிக அருகில் இந்த ஏவுகணைகள் விழுந்துள்ளன. டிமோனா நகரம் அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், ஆராத் நகரம் 35 கி.மீ தொலைவிலும் உள்ளன.
வான் பாதுகாப்பு அமைப்பை மீறிய ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை (Air Defence Systems) மீறி, ஈரான் ஏவுகணைகள் அணுசக்தி மையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஊடுருவியது இதுவே முதல்முறை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேல் எடுத்த முயற்சிகள் சில இடங்களில் தோல்வியடைந்ததை அந்நாட்டு ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
பதிலடிக்கு பதிலடி: போரின் பின்னணி
ஈரானின் நடான்ஸ் (Natanz) பகுதியில் உள்ள முக்கிய அணுசக்தி மையத்தின் மீது நேற்று (மார்ச் 21, சனிக்கிழமை) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாகவே சில மணி நேரங்களில் ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. நடான்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஈரான் இதனை இஸ்ரேலின் “குற்றச் செயல்” என்று சாடியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் கவலை
இந்த தாக்குதல் குறித்து ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (IAEA) கூறுகையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவோ அல்லது கதிரியக்க கசிவு ஏற்பட்டதாகவோ தற்போதைக்குத் தகவல்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா சகரோவா, இத்தகைய தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் “பெரிய பேரழிவை” ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் உலகப் போராக மாறும் சூழல்?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த இரவை இஸ்ரேலுக்கு ஒரு “கடினமான பொழுது” என்று வர்ணித்துள்ளார். ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை உலகப் போராக மாற்றும் சூழலை உருவாக்கியுள்ளன. அமைதியை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டியது அவசியமாகிறது.
