புதுச்சேரி,மார்ச்.23; 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு, ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
போதிய இடைவெளியின்றி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 23, திங்கள்) முடிவடைந்தது.
நேற்றிரவு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் நடிகர் விஜய்!
புதுச்சேரி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 30 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை நேற்றிரவு வெளியிட்டது. இதனால் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தேர்தல் அவர்களுக்குப் புதிதென்றாலும் களப்பணியாற்ற அவர்கள் ஆயத்தமாகி வந்தனர்.
திடீர் திருப்பமாக ‘நேயம் மக்கள் கழகம்’ என்ற கட்சியுடன் கூட்டணி!
இதுபோன்ற சூழலில், திடீர் திருப்பமாக தவெகவுடன் ‘நேயம் மக்கள் கழகம்’என்ற கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதுச்சேரி மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தவெக சார்பில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு
மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ‘நேயம் மக்கள் கழகம்’ நிறுவனத் தலைவர் நேரு என்கிற குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்று என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
