சென்னை,ஏப்.10; தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யைச் சந்தித்தது. இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி தற்போது வீசியுள்ள புதிய குண்டு திமுக கூட்டணியிலும் தமிழ்நாடு தேர்தல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்-பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு பேசுபொருளாகி அடங்கியது
காங்கிரஸில் ராகுலுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் சில நாட்களுக்குப் பின்னர் அடங்கியது.
தற்போது தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வரும் நிலையில், விஜய் உடனான சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி வீசியிருக்கும் புதிய குண்டு திமுக கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தலைமையின் அனுமதி பெற்றே விஜய்யை சந்தித்ததாக பேட்டி
விஜய் உடனான சந்திப்பு குறித்த பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, தற்போது பிரவீன் சக்கரவர்த்தி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சில மாதங்களுக்கு முன் விஜய்யை தனிப்பட்ட முறையில் நான் சந்திக்கவில்லை; கட்சித் தலைமை அனுமதியுடன்தான் சந்தித்தேன்; கடந்த ஆறு மாதங்களில் நான் செய்த அனைத்தும், காங்கிரஸ் கட்சித் தலைமையின் அறிவுரை, ஒப்புதல் மற்றும் அனுமதியுடன் தான் நடந்தன என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
“நான் விஜய்யைச் சந்தித்தது ரகசியமானது அல்ல. காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமையிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே அவரைச் சந்தித்தேன்” என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் தாக்கம்
தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பதை காங்கிரஸ் கவனித்து வருகிறது. பிரவீன் சக்கரவர்த்தி தனது பேட்டியில், “விஜய் இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக மாறியுள்ளார். அவரது பொதுக்கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தை வெறும் சினிமா ரசிகர்களாகப் பார்க்க முடியாது; அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி குறித்த யூகங்கள்
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு தன் பலமே தெரியவில்லை; காங்கிரஸ் புத்துயிர் பெற இந்த முறை ஒரு வாய்ப்பை பயன்படுத்த நினைத்தோம்; தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த வேண்டும்; குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாட்டில் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்; இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ள ஏன் கடுமையாக உழைக்கக் கூடாது? அப்படியிருக்கும்போது ஒரு காங்கிரஸ் கட்சித் தொண்டரோ அல்லது தலைவரோ அமைச்சராகி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஏன் ஆசைப்பட மாட்டார்? நியாயமில்லாத எதையும் நாங்கள் கேட்கவில்லை என்றும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
“வரும் தேர்தல் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும்”
காங்கிரஸுக்கு அதிக சீட் கிடைக்காததால் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்; அதிக இடங்கள் கிடைக்காத பட்சத்தில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; மேலும் வரும் தேர்தல் ஒரு கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும்; இதில் தவெக ஆளுங்கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் என்பது உண்மை என்றும் பிரவீன் சக்கரவர்த்தி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என நம்பும் தேசியக் கட்சிகள்
தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறி வருவதாக தேசியக் கட்சிகளும் நம்புகின்றன. பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த விளக்கம், காங்கிரஸ் கட்சியின் மேலிடம் விஜய்யுடன் ஒரு சுமுகமான உறவைப் பேண விரும்புவதையே காட்டுகிறது. இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில், பிரவீன் சக்கரவர்த்தியின் தகவல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக மாறும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
