சென்னை,மே.05; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (மே 4, 2026) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 108 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவுக்கு அந்த அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை.
ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோர விஜய் திட்டம்
இருந்தபோதிலும், விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது. ஆளுநரும் அதற்கு அனுமதி அளிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு குறிப்பிட்ட தினங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
தவெக பெரும்பான்மைக்கு மேலும் 12 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக ஆகியோர் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கூட்டணி ஆட்சியமைக்க இதுவரை அழைப்பு வரவில்லை!
இந்த நிலையில், கூட்டணி ஆட்சியமைக்க இதுவரை தவெகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர். தவெக அழைத்தால் மாநில செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுவை கூட்டி ஆதரவு அளிப்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதேபோல் தவெகவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சியும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
