சென்னை,மே.10; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் 37 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக, இந்த முறை வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது மட்டுமின்றி, பல இடங்களில் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளது. இந்தத் தொடர் தோல்வியே தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியிருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
37 எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டது எப்படி?
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், சென்னை திரும்பியதும் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில் சுமார் 37 எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஒன்றுகூடி ஆலோசித்துள்ளனர். இதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்ற முக்கியத் தலைவர்களும் பங்கேற்றதாகக் தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவா?
அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலின்படி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் இந்த 37 எம்.எல்.ஏ.க்களும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவின் மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் பிரிந்து செல்வதால், அவர்கள் மீது ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ பாயாது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் பலம் அதிகரிக்குமா?
ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை விஜய் எட்டிவிட்ட நிலையில், தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் கிடைத்தால் சட்டப்பேரவையில் தவெகவின் பலம் அசுர வேகத்தில் உயரும். இது தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சந்தித்த பிளவுகளைப் போலவே, தற்போதும் ஒரு மிகப்பெரிய பிளவு ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாக கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த சவால், அதிமுகவின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையும் மாற்றியமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
