அமெரிக்காவில் வீசிவரும் கடும் பனிப்புயலால் சுமார் ஐந்தரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலமாகும். இந்தநிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது 3ஆவதாக உருவாக்கியிருக்கும் பனிப்புயல் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இது அதிதீவிர பனிப்புயலாக மாறியிருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு அடி உயரத்திற்கு பனி உறைந்து கிடக்கின்றது. வீடுகள் எல்லாம் வெண்பட்டு தரித்தது போல் காட்சியளிக்கின்றன. வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் பனியால் மூடப்பட்டுள்ளன.
