வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களின் உதவித்தொகை குறித்து கேள்வி
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் கீழ் பல்வேறு நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தங்களுக்கு உரிய நிதி வழங்கப்படவில்லை என மாணவர்கள் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், இதுகுறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
“திட்டத்தை செயலிழக்கச் செய்வதுதான் நோக்கமா?”
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, இதையும் திட்டமிட்டு மறைமுகமாக செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் தவெக அரசின் நோக்கமா? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியைத் தடையின்றி தொடர்வதற்கு தேவையான உதவித்தொகையை அரசு உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல், நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த விவகாரத்தில் எழுந்துள்ளது.
