Skip to content

எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் வேலையை விட்டுட்டு… முதலமைச்சர் விஜய்யை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!

சென்னை,மே.29; தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: உதயநிதி குற்றச்சாட்டு

சென்னையில் அண்மையில் நடந்த சில அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் தனது பதிவில், “சென்னை கோடம்பாக்கத்தில் போலீசார் உட்பட மூன்று பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது; காவல்துறையினரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அந்தச் சிறுவன் காவல் நிலையத்திற்கே ஓட வேண்டிய அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது; இதுவே சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் சீரழிந்து போயுள்ளது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்” என்று சாடியுள்ளார்.

தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்

சென்னையின் மற்றொரு பகுதியில் நடந்த குற்றத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். வேளச்சேரி பகுதியில் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி (Walking) சென்ற 61 வயது மதிக்கத்தக்க மூத்த பெண்மணி ஒருவரை, ஒரு கும்பல் வழிமறித்துப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கொடுமையும் அரங்கேறியுள்ளது என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் தற்போதைய ஆட்சியில் இல்லை என்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘போலீசுக்கே பாதுகாப்பு இல்லை’ – கும்பகோணம் சம்பவம்

பொதுமக்கள் மட்டுமன்றி, சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினருக்கே தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று உதயநிதி விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் ஆளுங்கட்சியைச் (தவெக) சேர்ந்த நபர்கள் தாக்கியதில், பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு போலீஸ்காரரின் கையே உடைந்து போனதாக வந்த செய்தியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த சோபா மாடல் ஆட்சியில், பொதுமக்களுக்கு போலீசாராலும் பாதுகாப்பு இல்லை; அதே நேரத்தில் தவறு செய்யும் ஆளுங்கட்சியினரிடம் இருந்து போலீசாருக்குமே பாதுகாப்பு இல்லை” என்று தனது பதிவில் அவர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள டோஸ்!

தொடர்ந்து தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“தன் ஆட்சியை எவ்வாறாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பிடிக்கும் (தன் பக்கம் இழுக்கும்) குதிரை பேரம் போன்ற வேலைகளில் ஈடுபடுவதை முதலமைச்சர் விஜய் உடனடியாக நிறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு, தன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறையை ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வைக்க முதலமைச்சர் தீவிர முயற்சி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

விஜய்-உதயநிதி இடையிலான அரசியல் மோதல் தீவிரம்

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, திமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக-வின் மீதான விமர்சனங்களை உதயநிதி ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

‘சோபா மாடல் ஆட்சி’ என்று தற்போதைய அரசை விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிக்கை, தமிழ்நாடு அரசியல் களத்தில் முதலமைச்சர் விஜய் தரப்பிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தரப்பிற்கும் இடையேயான அரசியல் மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *