திருவனந்தபுரம்,ஏப்.30; 140 தொகுதிகளை கொண்ட கேரளம் சட்டப்பேரவைக்கு கடந்த 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் சுமார் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதுபோன்ற சூழலில், கேரளம் தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று (ஏப்ரல் 29, 2026) வெளியாகின. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கேரளாவில் நிலவும் அரசியல் களம்
கேரளாவைப் பொறுத்தவரை பாரம்பரியமாகவே ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆகிய இரு அணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்த முறை பல்வேறு கருத்துக் கணிப்புகள் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளன.
இருப்பினும், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?
வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின்படி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF): பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.
ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF): சராசரியாக 60 முதல் 62 இடங்கள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நூலிழையில் ஆட்சியை இழக்கும் எனத் தெரிகிறது. பாஜகவுக்கு அதிகபட்சமாக 4 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று இரண்டு கருத்துக் கணிப்புகளும், ஒரு இடம் கூட கிடைக்காது என்று இரண்டு கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன.
அதன்படி,
மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள்
காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி – 71 தொகுதிகள்
ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி – 62 தொகுதிகள்
பாஜக – 4 தொகுதிகள்
மற்றவை – 3
மை ஆக்சிஸ் இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள்
ஐக்கிய ஜனநாயக முன்னணி – 83 தொகுதிகள்
இடதுசாரி ஜனநாயக முன்னணி – 55 தொகுதிகள்
பாஜக – 2
மற்றவை – 0
பிமார்க் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள்
இடதுசாரி ஜனநாயக முன்னணி – 75 தொகுதிகள்
ஐக்கிய ஜனநாயக முன்னணி – 62 தொகுதிகள்
பாஜக – 0
மற்றவை – 3
வோட் வைப் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள்
ஐக்கிய ஜனநாயக முன்னணி – 75 தொகுதிகள்
இடதுசாரி ஜனநாயக முன்னணி – 63 தொகுதிகள்
பாஜக – 0
இதரகட்சிகள் – 2
தேர்தலில் மும்முனை போட்டி நிலவியதா?
கேரளம் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா என மும்முனைப் போட்டி நிலவியதாக கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது பாஜக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
கேரளாவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மத்திய கேரளாவில் சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் ராகுல் காந்தியின் பரப்புரை ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமான அம்சங்களாக இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
