சென்னை,மே.02; இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களைப் பெரிதும் பாதித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
றெக்க கட்டிப் பறக்கும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை!
நேற்று (மே 1, 2026) மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டன. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237ஆக விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தல்கள் முடிந்தவுடன் சிலிண்டர் விலை உயர்வு
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் எல்பிஜி சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தியிருப்பதாக விமர்சித்துள்ளார். உலகச் சந்தையின் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றலாமா?
தற்போது மேற்காசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எல்பிஜி விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று, தனது எக்ஸ் தளப் பதவில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
