டெல்லி,ஜூன்.08; மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் இயங்கும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையை உடனடியாக கட்டாயமாக்கும் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் திக்விஜய் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கல்வி ஆண்டின் நடுப்பகுதியில் கொண்டு வரப்படும் இந்த திடீர் மாற்றம் மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கல்வி ஆண்டின் நடுவில் திடீர் மாற்றம்: பெற்றோர் கவலை
மத்திய இடைநிலை கல்வி வாரியம் கடந்த மே 15ஆம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கற்பித்தல் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் நாடாளுமன்ற கல்விக்கான நிலைக்குழுவிடம் முறையிட்டனர்.
பெற்றோர்களின் இந்த நியாயமான கவலைகளைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் திக் விஜய் சிங்கின் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
போதிய ஆசிரியர்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை
நாடாளுமன்றக் குழுத் தலைவர் தனது கடிதத்தில், “தகுதியான ஆசிரியர்கள், முறையான பாடப்புத்தகங்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமல் இந்த கொள்கையை அவசரகதியில் அமல்படுத்துவது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளின் கல்வித் திட்டத்தை சீர்குலைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், NCERT இன்னும் புதிய பாடப்புத்தகங்களை வெளியிடாததால், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் பயன்படுத்துமாறு சிபிஎஸ்இ பரிந்துரைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சவால்கள்
இந்தி பேசாத தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என திக்விஜய் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். பல உள்ளூர் மற்றும் பழங்குடியின மொழிகள் சிபிஎஸ்இ-இன் அங்கீகரிக்கப்பட்ட மொழிப் பட்டியலில் இடம் பெறவில்லை.
மூன்றாவது மொழியாகப் பல பள்ளிகளில் சமஸ்கிருதம் தேர்வு செய்யப்பட்டாலும், அதனை கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் புத்தகங்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
நீதிமன்ற வழக்கு மற்றும் வாரியத்தின் முரண்பாடு
கடந்த ஆண்டு (2025) டிசம்பரில் நடைபெற்ற சிபிஎஸ்இ நிர்வாகக் குழு கூட்டத்தில், ‘NCERT புத்தகங்கள் வெளியாகும் வரை தற்போதைய கல்வி முறையே தொடரும்’ எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக மே மாதத்தில் புதிய சுற்றறிக்கை வெளியானது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதன் தீர்ப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதி வரவிருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே ஜூலை 1 முதல் இத்திட்டத்தை அமல்படுத்த வாரியம் முயல்வது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் என கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத போது மும்மொழிக் கொள்கை எதற்கு?
கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான காரணியாகும். போதிய உள்கட்டமைப்பும், பாடப்புத்தகங்களும் இல்லாத நிலையில், மும்மொழி கொள்கையை அவசரமாக அமல்படுத்துவது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையற்ற மன அழுத்தத்தையே தரும். எனவே, லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, இந்த உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்குப் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
