Skip to content

டி.கே.சிவகுமார் ஆதரவாளர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதாக எழுந்த புகார்! திட்டவட்டாக மறுக்கும் முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு,மார்ச்.04; கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்களை அரசு இயந்திரம் மூலம் உளவு பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலும் நிராகரித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என்ன?

கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) தலைவர் எச்.டி. குமாரசாமி ஆகியோர் சமீபத்தில் ஒரு பரபரப்பான புகாரை முன்வைத்தனர். அதில், டி.கே. சிவகுமார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முதலமைச்சர் சித்தராமையா ஒரு தனிப்படையை அமைத்துள்ளதாகவும், அவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

சித்தராமையாவின் பதிலடி: “பாலும் தேனும் போன்ற உறவு”

இந்த புகார்களை “வேலையில்லாத எதிர்க்கட்சிகளின் விரக்தி நிலையைத் தான் இது காட்டுகிறது” என்று சித்தராமையா விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

நானும் டி.கே. சிவகுமாரும் பாலும் தேனும் போல நெருக்கமாக உள்ளோம்.

எங்கள் உறவைக் குலைக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன, ஆனால் அவை ஒருபோதும் பலிக்காது.

எங்கள் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களே தவிர, தனிப்பட்ட ஒருவரின் ஆதரவாளர்கள் அல்ல.

உளவு பார்க்கும் அதிகாரம் குறித்து விளக்கம்

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் உளவுத்துறையை எவ்வாறு பயன்படுத்தினார்களோ, அதே கண்ணோட்டத்தில் இப்போது பேசுகிறார்கள் என்று சித்தராமையா சாடினார். குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது பல சாமியார்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாக சிபிஐ (CBI) விசாரணையில் தெரியவந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

தலைமை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் இதுவேறு!!

கர்நாடக காங்கிரஸில் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த உளவுப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் கட்சிக்குள் இருக்கும் விரிசலை தற்காலிகமாகச் சரிசெய்துள்ளனர். 2028 வரை எங்கள் உறவு வலுவாக இருக்கும் என்று டி.கே. சிவகுமாரும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *