Skip to content

தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? -ஜி.கே. வாசன் விளக்கம்

சென்னை,மார்ச்.27; அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (மார்ச் 27, 2026) பகல் 12.12-க்கு வெளியிட்டார். அதன்படி,

  1. ராணிப்பேட்டை – வி.எம். கார்த்திகேயன்,
  2. ஈரோடு மேற்கு – எம். யுவராஜா,
  3. ஒட்டன்சத்திரம் – விடியல் எஸ். சேகர் (முன்னாள் எம்எல்ஏ),
  4. கும்பகோணம் – எம்.கே.ஆர். அசோக்குமார்,
  5. கிள்ளியூர் – டாக்டர் ஜெ. நிவின் சைமன்.

இந்த அறிவிப்புகளுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், வேட்பாளர் பட்டியலை நண்பகல் 12.12 மணிக்கு வெளியிடப் போவதாகத் தெரிவித்தார். அதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது; எங்கள் கட்சிக்கு உள்ள நம்பிக்கையை நாங்கள் பின்பற்றுகிறோம்; அதுமட்டுமல்ல, அது நூற்றுக்கு நூறு நல்ல நேரம் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

தாமரை சின்னத்தில் போட்டி ஏன்?

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நீங்கள் இப்போது ஏன் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள் என்று வாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

2019 மக்களவைத் தேர்தலில் நான் அதிமுக கூட்டணியில் நேரடியாகப் போட்டியிட்டேன். அதன் அடிப்படையில் எனக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் பின்னர் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் வழங்கப்பட்டது.

2021-ல் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை, இரட்டை இலையில் போட்டி..

அதற்குப் பிறகு அடுத்த இரண்டு வருடங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கூட்டணி தொடர்ந்தது. தேர்தல் நெருங்கும்போது எங்களுக்கு கிடைக்க வேண்டிய சைக்கிள் சின்னம் இன்றைக்குப் போல அன்றைக்கும் கிடைக்கவில்லை. அதனால், நான் அப்போது இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டேன். அதுதான் கூட்டணி நியாயமும்கூட.

தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை வழங்க இயலவில்லை

அதற்குப் பிறகு எங்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்கள்; வழக்கு தொடர்ந்தார்கள். சென்ற மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் 3 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில்தான் போட்டியிட்டோம். இந்த முறை, மீண்டும் சைக்கிள் சின்னத்தை வழங்க முடியாத சூழல் குறித்து தேர்தல் ஆணையம் கூறியது.

பாஜக தலைமையில் என்பதால் தாமரை சின்னத்தில் போட்டி..!

கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். இம்முறை சைக்கிள் சின்னம் கிடைக்காததால் நான், கூட்டணியில் இருக்கிற பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இதுதான் உண்மை நிலை என விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *