Skip to content

தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம்: வி.சி.க., ஐ.யூ.எம்.எல். சார்பில் 2 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

சென்னை,மே.22; தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) கூட்டணி ஆட்சியில், அமைச்சரவையின் அடுத்தகட்ட விரிவாக்கம் இன்று (மே 22, 2026) நடைபெறுகிறது. இந்த விரிவாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

நேற்று (மே 21, வியாழன்) 23 அமைச்சர்கள் பதவியேற்பு

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே 10 தேதியன்று முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் முதற்கட்டமாகப் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (மே 21, வியாழன்) காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் உட்பட 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (மே 22, 2026) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இணைகின்றன.

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான மக்கள் மாளிகையில் (ராஜ் பவன்) இன்று காலை நடைபெறும் எளிமையான விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்குப் பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

ஒதுக்கப்படும் முக்கியத் துறைகள்

நேற்று (மே 21, 2026) நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இரண்டு முக்கிய துறைகள் காலியாக வைக்கப்பட்டிருந்தன. தற்போது விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வன்னியரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், ஐ.யூ.எம்.எல் சார்பில் ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறையும் அமைச்சராகவும் பதவியேற்கின்றனர்.

கூட்டணிக் கட்சிகளுக்கு சமமான அதிகாரப் பகிர்வு

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய ஆட்சியில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் சமமான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு வருகிறது. வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் சேர்க்கையோடு தமிழ்நாடு அமைச்சரவையின் பலம் 35 ஆக உயர்ந்து முழுமையடைகிறது. இந்த கூட்டணி அமைச்சரவை மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, சமூக நீதியையும், சிறுபான்மையினரின் நலன்களையும் காக்கும் வகையில் செயல்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *