சென்னை,ஜூன்.18; புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகு, 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூன் 18, 2026) காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் முறைப்படி தொடங்கியது. ஆளுநர் தனது உரையில் அரசின் கொள்கைகள், நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்த முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார்.
3 நாட்கள் மட்டுமே நடைபெறும் கூட்டத்தொடர்
ஆளுநர் உரை முடிந்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு (BAC – Business Advisory Committee) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர், இந்த கூட்டத்தொடரை மொத்தம் 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
சட்டப்பேரவை கால அட்டவணை (Schedule)
சபாநாயகர் அறிவிப்பின்படி, சட்டப்பேரவை நிகழ்வுகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன:
ஜூன் 19: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் ராமசாமி, திரைப்படத்துறையைச் சேர்ந்த ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜன். பாரதிராஜா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்படும்.
பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கும்.
lதிங்களன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை
சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து 22ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும். அன்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீதான பதிலுரை நடைபெறும்.
சட்டமன்றத்தின் தற்போதைய பலம்தற்போது தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் பலம் 228 ஆக உள்ளது. முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதாலும், மேலும் 5 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாலும் இந்த எண்ணிக்கை 228 ஆகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசின் கொள்கை விளக்கமாக அமைந்த இந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் அதன் மீதான விவாதங்கள் இந்த 3 நாட்களில் அமையவுள்ளன. புதிய கூட்டணிக் கணக்குகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே நடைபெறும் இந்த 3 நாள் கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
