Skip to content

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்: யார் இவர்? முழு பின்னணி!

சென்னை,மே.29; தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு புதிய தலைமை இயக்குநராக (DGP) மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை (BSF) டிஜிபியாக பணியாற்றி வரும் இவர், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக இந்த முக்கியப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய இந்த முக்கிய ஐபிஎஸ் அதிகாரி மாற்றம், அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

யார் இந்த மகேஷ்குமார் ஐபிஎஸ்?

மகேஷ்குமார பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால், சட்டம் பயின்ற இவர் தனது 22ஆவது வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அனுபவம் இவருக்கு உண்டு:

தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர் (SP).

சென்னை பூக்கடை துணை ஆணையர் மற்றும் சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர்.

சிபிசிஐடி ஐஜி (CBCID IG) மற்றும் மதுரை காவல் ஆணையர்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி.

குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டில் சென்னையின் மிக இளம் வயது காவல் ஆணையராக (Police Commissioner) பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றினார்.

இவை தவிர, மத்தியப் பணிக்கு (Central Deputation) அயல் பணியாகச் சென்று பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சுமார் 7 ஆண்டுகள் சிபிஐ (CBI) அதிகாரியாகப் பணியாற்றிய மிக நீண்ட கள அனுபவமும் இவருக்கு இருக்கிறது.

நியமனத்தின் பின்னணியும் மத்திய தேர்வாணைய பரிந்துரையும்

முன்னதாக தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தற்காலிக மற்றும் தேர்தல் ஆணையத்தின் தற்காலிக ஏற்பாடுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த சூழலில் நிரந்தர டிஜிபியை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமடைந்தன.

டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பணி மூப்பு அடிப்படையில் தகுதியான அதிகாரிகளின் பட்டியலிலிருந்து:

ராஜீவ்குமார் ஐபிஎஸ் (காவல் உயர் பயிற்சியகம்)

சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்

மகேஷ்குமார் ஐபிஎஸ்

ஆகிய 3 அதிகாரிகளின் பெயர்களை உள்ளடக்கிய இறுதிப் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதில், மிகச் சிறந்த நிர்வாகத் திறனும் மத்திய, மாநில காவல் துறைகளில் பரந்த அனுபவமும் கொண்ட மகேஷ்குமாரை தமிழ்நாடு அரசு சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக முறைப்படி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

பல சவால்களுக்கு மத்தியில் புதிய டிஜிபி ஆகிறார் மகேஷ்குமார்

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் நவீன காவல் துறையை உருவாக்குவது போன்ற பல சவால்களுக்கு இடையே மகேஷ்குமார் புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்கிறார். சிபிஐ மற்றும் எல்லை பாதுகாப்புப் படை போன்ற மத்திய அமைப்புகளிலும், சென்னையின் காவல் ஆணையராகவும் திறம்படச் செயலாற்றிய இவரது அனுபவம், தமிழ்நாடு காவல் துறைக்கு புதிய உத்வேகத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *