திருத்துறைப்பூண்டி ரிசர்வ் தொகுதி (எண் – 166)
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தொகுதி பட்டியலினத்தவருக்கான தொகுதியாகும்.
1957 தொடங்கி இதுவரை 15 முறை தேர்தலைச் சந்தித்துள்ள இத்தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர திமுக 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளன.
இந்த தொகுதியில் பட்டியலினத்தவர், முத்தரையர், அகமுடையார், இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் என பல்வேறு சமூகத்தினர் பரவலாக வாழ்கின்றனர்.
திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் சீட்?
2021 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து 97,000 வாக்குகளைப் பெற்று வென்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவின் சுரேஷ் குமாருக்கு 67,000 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சியின் ஆர்த்தி சுமார் 15,000 வாக்குகளைப் பெற்றார்.
வரும் தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு இந்தத் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டால், மாரிமுத்து தான் களம் காண்பார் என தோழர்கள் கூறுகின்றனர்.
காம்ரேடுகளுக்குப் பதில் திமுக களம் காண விரும்புகிறதா?
ஒருவேளை திமுக களமிறங்கினால், அந்தக் கட்சியின் ஏ.கே.எஸ். விஜயன், ஆடலரசன், இளையராஜா ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கின்றனர்.
அதிமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்ட சுரேஷ் குமாருக்கு மீண்டும் சீட் கிடைக்கலாம் எனப் பேசப்படுகிறது. அவர் தவிர, அதிமுக நிர்வாகிகளான பால தண்டாயுதம், உமா மகேஸ்வரி ஆகியோரும் சீட் கேட்பதாகப் பேசப்படுகிறது.
தவெகவின் வருகை அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் சிதறடிக்கும் என்று தான் பரவலாகப் பேசப்படுகிறது.
எனினும், வரும் தேர்தலில், இடதுசாரிகளின் பலம், பட்டியலினத்தவர் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் ஆகியவற்றால் திமுக கூட்டணியே முந்துகிறது.