Skip to content

திருப்பரங்குன்றம் விவகாரம்; தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில், தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. நீதிமன்றம் கூட சொல்ல முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். இது குறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்னை வந்தால், நீதிமன்றத்தை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்ட ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறுகையில், “திருப்பரங்குன்றம் வழக்கு, தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. உங்கள் கோரிக்கையை (தமிழ்நாடு அரசு) ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து நடந்த விசாரணையின்போது திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் 17ஆம் தேதி தலைமைச் செயலாளர் மற்றும் மதுரை மாநகர இணை ஆணையர் ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *