சென்னை,மே.30; தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அவரது 56 வினாடி வீடியோ ரீல் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
எக்ஸ் தளத்தில் சுமார் 20 லட்சம் (2 Million) பார்வைகளையும், இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பார்வைகளையும் கடந்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ஒரு அரசு அமைச்சகத்தின் செய்தித் தொடர்புகளுக்குக் கிடைக்காத அளவிற்கான அசாத்திய வரவேற்பை இந்த வீடியோ பெற்றுள்ளது.
அமைச்சர் கீர்த்தனாவின் முதலீட்டு வாக்குறுதிகள் என்ன?
“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கோப்புகள் தேங்குவது, அனுமதிகள் தாமதமாவது மற்றும் காத்திருப்புகளை ஏற்படுத்தும் அரசை யாரும் விரும்புவதில்லை. நமது முதலமைச்சர் ஜோசப் விஜய், அந்தப் பிரச்னையைச் சரிசெய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார்,” என்று தமிழ்நாடு தொழில், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் கீர்த்தனா அந்த வீடியோவில் பேசத் தொடங்குகிறார்.
மேலும், அந்த வீடியோவில் அவர் பின்வரும் முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்:
21 நாட்களில் அனுமதி: தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளும் 21 நாட்களுக்குள் வழங்கப்படும்.
ஒற்றைச் சாளர முறை (Single Window Approval): முதலீட்டாளர்கள் எளிதாக அனுமதி பெற ஒற்றைச் சாளர முறை மேம்படுத்தப்படும்.
நேரடி மேல்முறையீடு: தாமதங்களைத் தவிர்க்க நேரடியாக உயர் அதிகாரிகளுக்குக் கொண்டு செல்லும் கட்டமைப்பு.
தொழில்நுட்ப வளர்ச்சி: தமிழ்நாடு முழுவதும் அதிவேக தொழில்மயமாக்கல் மற்றும் ட்ரோன் வழித்தடங்கள் (Drone Corridors) அமைத்தல்.
புதிய தலைமுறை ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனர்களைக் கவரும் வகையில் இந்தத் தகவல் தொடர்பு முயற்சி இருப்பதாக தற்போதைய அரசின் ஆதரவாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
எழும் விமர்சனங்களும் ட்ரோல்களும் (Trolls)
அதே வேளையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இது ஒரு ‘தொழில்முறை அற்ற’, ‘ரீல்ஸ் பாணி விளம்பரம்’ என்றும், இதில் உள்ளடக்கத்தை விட ஆடம்பரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில நடைமுறைகளை ஏன் புதிது போலக் காட்ட வேண்டும் என்றும், இந்த வீடியோவை எடுப்பதற்கு முன்பு உரிய ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அமைச்சர் கீர்த்தனாவின் உச்சரிப்பு தொனி (Dramatic delivery tone) மற்றும் எடிட்டிங் பாணியும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி, கோடிக்கணக்கில் முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் யாராவது ரீல்ஸ் வீடியோவைப் பார்ப்பார்களா என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
பெண்ணிய வெறுப்பு மற்றும் தனி நபர் தாக்குதல்கள்
துரதிர்ஷ்டவசமாக, இந்த விமர்சனங்கள் கொள்கை ரீதியாக மட்டும் நிற்காமல், தனிநபர் தாக்குதலாகவும் மாறியுள்ளன. அமைச்சர் கீர்த்தனாவின் ஆங்கிலப் புலமை, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் கடந்து, அவர் அணிந்திருந்த ஆடை, தலைமுடி அலங்காரம் மற்றும் மூக்குத்தி வரை பல தரப்பினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
“தவெக அமைச்சர் தனது வேலையைச் செய்வதை விட்டுவிட்டு, ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிப்பது போல உடை அணிந்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்,” என்று ஒரு பயனர் பதிவிட்ட கருத்து 3,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
அமைச்சர் கீர்த்தனாவின் ‘ரீல்ஸ்’ புதுமையான முயற்சியா?
டிஜிட்டல் யுகத்தில் புதிய தலைமுறை முதலீட்டாளர்களைக் கவர, புதுமையான முறையில் அரசுத் திட்டங்களை விளம்பரப்படுத்துவது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், அது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரமாக மாறிவிடக் கூடாது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
அதே சமயம், ஒரு பெண் அமைச்சரின் நிர்வாகத் திறனை விவாதிக்காமல், அவரது ஆடை மற்றும் தோற்றத்தை வைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பெண்ணிய வெறுப்பு (Misogyny) சார்ந்த ட்ரோல்கள் கண்டிக்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
