ஆஸ்லோ,ஜூன்.06; ஆஸ்லோவில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே சதுரங்க போட்டித் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா (R Praggnanandhaa) சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை 20 வயதான பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் அசாத்திய ஆட்டம்
நேற்று (ஜூன் 05, 2026) நடைபெற்ற இத்தொடரின் விறுவிறுப்பான இறுதிச் சுற்றில், பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கெய்மரை வீழ்த்தினார். இதன் மூலம் மொத்தம் 18 புள்ளிகள் பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து மகுடம் சூடினார். அமெரிக்காவின் வெஸ்லி சோ (Wesley So) இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
இந்தத் தொடர் பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) அவருடைய சொந்த மண்ணிலேயே, அதுவும் கிளாசிக்கல் சதுரங்க (Classical Chess) பிரிவில் இரண்டு முறை பிரக்ஞானந்தா வீழ்த்தி ஒட்டுமொத்த சதுரங்க உலகையும் வியப்பில் ஆழ்த்தினார். தொடரின் முதல் பாதியில் சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும், கடைசி 4 கிளாசிக்கல் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து (Winstreak) அசாத்தியமான மீள்வருகையை (Comeback) அவர் பதிவு செய்துள்ளார்.
ஜாம்பவான்களை வீழ்த்தி அசத்திய பிரக்ஞானந்தா
குறிப்பாக அலிரேசா ஃபிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் உலக சாம்பியன் குகேஷ் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி இந்த அரிய சாதனையை எட்டியுள்ளார்.
சதுரங்க உலகின் ஜாம்பவான்கள் பலரும் கலந்துகொண்ட இந்த கடினமான தொடரில், தனது அசாத்திய திறமையாலும், மன உறுதியினாலும் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இந்த வரலாற்று வெற்றி இந்திய செஸ் விளையாட்டுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும். சர்வதேச அரங்கில் இந்தியாவின் கொடியை மீண்டும் ஒருமுறை பிரக்ஞானந்தா உயரப் பறக்கவிட்டுள்ளார்.
