Skip to content

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; தேசிய தேர்வு முகமை அதிகாரிக்கு தொடர்பு? சிபிஐ நீதிமன்றத்தில் அதிரடித் தகவல்!

டெல்லி,மே.15; நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சிபிஐ (CBI) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிக்குத் தொடர்பு?

டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுவில், மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் கசிவுக்கான மூலாதாரம் தேசிய தேர்வு முகமைக்கு உள்ளேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சுபம் கைர்னார், புனேவைச் சேர்ந்த ஒரு நபரிடமிருந்து வினாத்தாளைப் பெற்றுள்ளார். அந்த நபருக்கு தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலைப் பதிவு செய்த நீதிபதி, ஐந்து பேரை 7 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக பரவிய வினாத்தாள்

விசாரணையில், ஏப்ரல் 29ஆம் தேதியே இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான 500-600 கேள்விகள் அடங்கிய பிடிஎஃப் (PDF) கோப்பு டெலிகிராம் வழியாகப் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 180 கேள்விகள் அசல் தேர்வுத் தாளில் இருந்த கேள்விகளுடன் துல்லியமாக ஒத்துப்போயுள்ளன. இந்த வினாத்தாள்கள் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது

இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் புனேவைச் சேர்ந்த மனிஷா வாக்மரே மற்றும் அகமதுநகரைச் சேர்ந்த தனஞ்சய் லோகண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் முக்கிய மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில நீக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்க தடயவியல் சோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நீட் விவகாரம்; மிகப்பெரிய கல்வித்துறை ஊழல்?

சுமார் 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ள இந்த வினாத்தாள் கசிவு வழக்கில், அதிகாரிகளின் பங்கு உறுதி செய்யப்பட்டால் அது மிகப்பெரிய கல்வித்துறை ஊழலாகக் கருதப்படும். தற்போது வினாத்தாள் அச்சடிக்கப்பட்ட இடம் மற்றும் அதன் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளை சிபிஐ தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. மீண்டும் தேர்வு நடத்தப்படவிருப்பதால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *