Skip to content

பீகார் மாநிலங்களவை தேர்தல்; ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ‘கை’விட்ட காங்கிரஸ்! தேஜஸ்வி கடும் அதிருப்தி

பாட்னா,மார்ச்.18; பீகார் அரசியலில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மகாபந்தன் கூட்டணியின் வேட்பாளர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆர்ஜேடி (RJD) மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் அதிகரித்துள்ளது.

தேர்தல் நிலவரம்: எளிதாக வென்ற என்டிஏ

பீகாரில் காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், ஆளும் என்டிஏ (NDA) கூட்டணியைச் சேர்ந்த நிதிஷ் குமார், ராம்நாத் தாக்கூர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் பாஜகவின் சிவம் குமார் ஆகியோர் தங்களின் சட்டமன்ற பலத்தின் அடிப்படையில் மிக எளிதாக வெற்றி பெற்றனர்.

ஐந்தாவது இடத்திற்கு நடந்த கடும் போட்டி

இருப்பினும், ஐந்தாவது இடத்திற்கு கடுமையான போட்டி நிலவியது. என்டிஏ கூட்டணியின் ஆதரவுடன் ராஷ்டிரிய லோக் மஞ்ச் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும், ஆர்ஜேடி சார்பில் ஏ.டி.சிங்கும் களம் இறங்கினர். இந்த விறுவிறுப்பான போட்டியில் இறுதியில் உபேந்திர குஷ்வாஹா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் புறக்கணிப்பு

வெற்றிக்குத் தேவையான 41 வாக்குகளைப் பெற தேஜஸ்வி யாதவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் மாயாவதியின் ஆதரவைத் திரட்டியும், மகாபந்தன் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதற்குக் காரணம், கடைசி நேரத்தில் காங்கிரஸைச் சேர்ந்த மனோஜ் பிஸ்வாஸ், மனோகர் பிரசாத் சிங் மற்றும் சுரேந்திர குஷ்வாஹா ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மேலும், ஆர்ஜேடியைச் சேர்ந்த பைசல் ரஹ்மானும் மாயமானதால், ஏ.டி.சிங் தோல்வியைத் தழுவினார்.

கேள்விக்குறியாகும் மகாபந்தன் கூட்டணி

இந்தத் தோல்வி ஆர்ஜேடி கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஒத்துழைக்காதது தேஜஸ்வி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பீகார் அரசியலில் மகாபந்தன் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏற்பட்ட விரிசல் தொடர்கிறது..!

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் பீகார் எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள பலவீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. வரும் தேர்தல்களில் இந்த விரிசல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *