ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இன்று (04.12.2025) மாலை இந்தியா வருகிறார். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. சர்வதேச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார். இதுபோன்ற சூழலில் உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் போர் காரணமாக, புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் 23ஆவது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க புதின் இன்று இந்தியா வரவுள்ளார். டெல்லிக்கு வருகைதரும் புதின், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அவர் பாரம்பரிய விருந்தில் கலந்துகொள்கிறார். இந்திய-ரஷிய மாநாட்டின்போது, இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்பெறச் செய்யும் நோக்கில் பாதுகாப்பு, வணிகம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து மோடியும், புதினும் ஆலோசனை நடத்தவிருக்கின்றனர். புதினின் வருகையை ஒட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதின் இன்று இந்தியா வருகை; டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
