பெரம்பலூர் தொகுதி (எண் 147)
பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி ஒரு தனித்தொகுதியாகும்.
1951 முதல் இதுவரை 16 முறை தேர்தலைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிகபட்சமாக திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஐந்து முறை வென்றுள்ளது. காங்கிரஸ் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தொகுதியில் பட்டியலினத்தவரும் வன்னியர் சமூகத்தினருமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார், நாயுடு, மறவர், செட்டியார், உடையார் சமூகத்தினரும், சிறுபான்மை இனத்தவரும் உள்ளனர்.
கடந்த தேர்தலில் வென்ற திமுகவின் பிரபாகரன் இம்முறையும் சீட் கேட்கிறார். இவர், 2021 தேர்தலில் சுமார் 1,22,000 வாக்குகளைப் பெற்றார். பிரபாகரனிடம் தோற்றுப்போன அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வனுக்கு சுமார் 91,000 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சியின் மகேஸ்வரி சுமார் 19,000 வாக்குளைப் பெற்றார்.
திமுகவில் தற்போதைய எம்எல்ஏ பிரபாகரன் தவிர்த்து, பொறியாளர் அணி மாநிலத் துணைச் செயலாளர் இரா.நாகேந்திரன், வட்டச் செயலாளர் க.பாபு ஆகியோரும் சீட்டுக்கு முயற்சி செய்கின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் டில்லிபாபுவும் மெனக்கெடுகிறார்.
அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் எம்.ஏ.சேவியர் சீட் கேட்கிறார்.
நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் செல்வாக்கு இருப்பதாகப் பேசுகின்றனர். அவரது தவெக கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
