தயாரிப்பு பணிகளில் இருந்து ISRO விலகல் – விண்வெளி திட்டங்கள், அறிவியல் ஆராய்ச்சியில் கவனம்
ராக்கெட் செயற்கைக்கோள் தயாரிப்பு தனியாரிடம் முழுமையாக ஒப்படைக்கும் பணி தொடங்கிவிட்டதாக ஒன்றிய அரசின் IN-SPACe தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 தொழில்நுட்பங்கள் தனியாருக்கு மாற்றம்
விண்வெளித் துறை சார்ந்த 120 தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே தனியார் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பணிகளை படிப்படியாக தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ISRO இனி எதில் கவனம் செலுத்தும்?
இந்த மாற்றத்தின் மூலம் இஸ்ரோ (ISRO) நேரடியாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவதை குறைத்து, எதிர்கால விண்வெளிப் பயணத் திட்டங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, அறிவியல் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது மற்றும் புதிய விண்வெளிப் பயணத் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் இஸ்ரோ கவனம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பு தொடர்பான இந்த மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
