Skip to content

ரொனால்டோவின் முதல் சௌதி மகுடம்: சௌதி புரோ லீக் சாம்பியன் பட்டத்தை வென்று அல் நாசர் அணி சாதனை!

சௌதி அரேபிய கால்பந்து வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), தனது அல் நாசர் (Al Nassr) அணிக்காக தனது முதல் சௌதி புரோ லீக் (Saudi Pro League) பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் டமாக் (Damac) அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல் நாசர் அணி சாம்பியன் மகுடத்தைச் சூடியது.

சவுதி மண்ணில் ரொனால்டோவின் நீண்ட நாள் கனவு நனவானது

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகி அல் நாசர் அணியில் இணைந்ததில் இருந்தே, ஒரு பெரிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரொனால்டோவின் தேடல் தொடர்ந்தது. இதற்கு முன்பு அரபு கிளப் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருந்தாலும், சௌதி புரோ லீக் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். 41 வயதான இந்த போர்ச்சுகல் நட்சத்திரம், இதன் மூலம் சௌதி மண்ணில் தனது முதல் அதிகாரப்பூர்வ லீக் பட்டத்தை முத்தமிட்டுள்ளார்.

இறுதிப் போட்டியின் அனல் பறந்த ஆட்டம்

லீக் தொடரின் கடைசி நாளில் நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் அல் நாசர் அணியின் சாடியோ மானே (Sadio Mane) முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து, இரண்டாம் பாதி தொடங்கியதும் கிங்ஸ்லி கோமன் (Kingsley Coman) ஒரு சிறப்பான கோல் அடித்து முன்னிலையை 2-0 என உயர்த்தினார். இருப்பினும், டமாக் அணியின் மொர்லாயே சில்லா பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்து அல் நாசர் ரசிகர்களுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் இரட்டை கோல்கள்

அணியின் மீதான அழுத்தம் அதிகரித்த நேரத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்தில் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில், ஒரு அற்புதமான ஃபிரீ-கிக் (Free-kick) மூலம் பந்தை வலைக்குள் தள்ளி ரொனால்டோ கோல் அடித்தார். இத்துடன் நிறுத்தாமல், ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் அடித்து அல் நாசர் அணியின் வெற்றியை (4-1) உறுதி செய்தார். இந்த சீசனில் ரொனால்டோ அடித்த 27 மற்றும் 28-வது லீக் கோல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்தபோது, மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கைதட்டலுக்கு (Standing Ovation) இடையே ரொனால்டோ நெகிழ்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அல் ஹிலால் அணியை முந்தி சாம்பியனான அல் நாசர்

இந்த வெற்றியின் மூலம் அல் நாசர் அணி மொத்தம் 34 போட்டிகள் கொண்ட நடப்பு சீசனில், தனது பலத்த போட்டியாளரான அல் ஹிலால் (Al-Hilal) அணியை விட 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. அல் ஹிலால் அணி இந்த சீசன் முழுவதும் தோல்வியே அடையாமல் இருந்தபோதிலும், அல் நாசர் அணி புள்ளிகள் அடிப்படையில் அவர்களை முந்தி 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக (கிளப்பின் 11-வது லீக் பட்டம்) கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

கோப்பை வென்ற பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்த ரொனால்டோ, “இது எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று. யல்லா நாசர் (Vamoss Al Nassr)!” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சௌதி அரேபியாவிலும் பட்டம் வென்று அசத்திய ரொனால்டோ!

சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஸ் லீக் டூ (AFC Champions League Two) இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு இந்த சௌதி புரோ லீக் வெற்றி ஒரு தகுந்த பதிலடியாக அமைந்துள்ளது. போர்ச்சுகல், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது சௌதி அரேபியாவிலும் லீக் பட்டத்தை வென்று, தான் ஒரு ‘உலகளாவிய சாம்பியன்’ என்பதை ரொனால்டோ மீண்டும் நிரூபித்துள்ளார்.

வரவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடருக்கு போர்ச்சுகல் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரொனால்டோவிற்கு, இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *