சென்னை,மார்ச்.31; தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
தேர்தல் பரப்புரைக்கு வரவிருக்கிறார் ராகுல் காந்தி!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து விளக்கினார். அப்போது அவர், “ராகுல் காந்தி தற்போது கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்; விரைவில் அவர் தமிழ்நாட்டிற்கு வருவார்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்தும், தனியாகவும் அவர் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்; அதேபோல் பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர்” என்று தெரிவித்தார்.
விஜய்யின் பிரசாரம் மற்றும் செல்வப்பெருந்தகையின் பதில்
கொளத்தூர் தொகுதியில் நேற்று (மார்ச் 30, திங்கள்) நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது திரண்ட பிரமாண்ட கூட்டத்தைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை:
“நடிகர்களைப் பார்க்க யார் வேண்டுமானாலும் வருவார்கள்; சினிமா நட்சத்திரங்களுக்குக் கூட்டம் கூடுவது இயல்பு; நடிகர் அஜித் வந்தால் விஜய்யை விட 2 மடங்கு கூட்டம் வரும்; அதேபோல் ரஜினிகாந்த் வந்தால் 3 மடங்கு கூட்டம் கூடும்” என்று அதிரடியாக பதிலளித்தார்.
கூட்டம் வாக்குகளாக மாறுமா?
கூட்டத்திற்கும் வாக்கு வங்கிக்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டிய செல்வப்பெருந்தகை, “சினிமா நடிகர்களைப் பார்க்க வரும் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறும் என்று சொல்ல முடியாது; இதற்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோரே சிறந்த உதாரணம்; திரையுலகில் உச்சத்தில் இருந்த அவர்களுக்கே அரசியலில் மக்கள் ஆதரவு வேறாக இருந்தது” என்று அரசியல் எதார்த்தத்தை விளக்கினார்.
கூட்டம் வெற்றியின் அடையாளம் அல்ல என்பது சரியா?
தமிழ்நாடு அரசியலில் திரை நட்சத்திரங்களின் வருகை என்பது புதிதல்ல. இருப்பினும், 2026 தேர்தலை முன்னிட்டு விஜய் எடுத்துள்ள அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன. இந்த நிலையில், ‘கூட்டம் என்பது வெற்றியின் அடையாளம் அல்ல’ என செல்வப்பெருந்தகை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
