சென்னை,ஏப்.19; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல்; வாக்கு சேகரிப்பு தீவிரம்
திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக ஆகியன தேர்தலில் மல்லுக்கட்டுகின்றன. வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வில்லிவாக்கம், அம்பத்தூரில் திருமாவளவன் பரப்புரை
அந்த வகையில் அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஏப்ரல் 19, 2026) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை கடுமையாக விமர்சித்தார். திமுகவை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றிவிட்டு யாரை அந்த இடத்தில் அமர வைக்க விஜய் முயற்சிக்கிறார் எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.
“விஜய் வெற்றிபெற மாட்டார் என்பதை அவரே அறிவார்”
கட்டாயமாக விஜய் ஆட்சியில் அமரப் போவதில்லை-அது அவருக்கே நன்றாகத் தெரியும்- அதனால் தான் தோல்வி பயணத்தினால் பெரம்பூர் மற்று திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று திருமாவளவன் விமர்சித்தார்.
திமுகவை அப்புறப்படுத்திவிட்டு தவெக ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க முடியாது – அதனால் தான் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க விஜய் போராடி வருகிறார் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.
விஜய் ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு வாக்கு செலுத்துக: அன்புமணி
இதனிடையே, கடலூரில் இன்று (ஏப்ரல் 19, 2026) செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி, விஜய் ஆதரவாளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காமல், அதிமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விஜய் வாக்குகளைப் பெறுவார், ஆனால், வெற்றிபெற முடியாது-திமுக அகற்றப்பட வேண்டுமென்றால் விஜய் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் நிறைவேறும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.
“மசோதா நகலை ஸ்டாலின் எரிந்தது தேசவிரோதச் செயல்”
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நகலை முதலமைச்சராக இருந்துகொண்டு ஸ்டாலின் எரித்தது தேசவிரோதச் செயல் என்று அன்புமணி சாடினார். இதற்கு தண்டனை வழங்க வேண்டும் – இதனை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ஸ்டாலினின் மனநிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.
