சென்னை,மே.14; இந்திய நாட்டு குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதோடு, அந்த நாட்டு சட்டப்பூர்வ குடிமகனாகவும் மாறி குடியுரிமை பெற்றுவிட்டால் அவர்களது இந்திய பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுவிடும்.
அப்படிப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து செல்லலாம். ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.
வெளிநாடு குடியுரிமை பெற்றவர்கள் தமிழ்நாடு தேர்தலில் ஓட்டு!
இந்நிலையில், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாடுகளில் வசிக்கும் பல தமிழர்கள் சொந்த ஊர் வந்து வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் (Immigration Officers) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கைவிரலில் மை உள்ளதா?- விமானநிலையத்தில் கண்காணிப்பு
வெளிநாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் வரும் பயணிகளின் கை விரல்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. வாக்களித்த அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வெளிநாடு செல்லும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
17 பேர் கைது: காவல்துறையிடம் ஒப்படைப்பு
விமான நிலைய சோதனையின் போது, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற 17 பேரின் விரலில் தேர்தல் மை இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களின் விமானப் பயணங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் மீது தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணை: வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட (S.I.R) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் இவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்ததாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் கவனத்திற்கு….
இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள், உணர்ச்சிவசப்பட்டோ அல்லது தெரியாமலோ இந்தியாவில் வாக்களிப்பது சட்டப்படி குற்றமாகும். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்தியத் தேர்தலில் வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
