Skip to content

தவெக தலைமையில் தான் ஆட்சி: எந்தக் கூட்டணியிலும் இல்லை: விஜய் திட்டவட்டம்!

சென்னை,மார்ச்.19; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிமுக-பாஜக கூட்டணியில் இணையப் போவதாக பல நாட்கள் செய்திகள் உலா வருகின்றன.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக அண்மையில் டெல்லி சென்றிருந்த விஜய், பாஜக நிர்வாகிகள் சிலரை ரகசியமாக சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

அரசியல் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே, தவெக ஏதோ ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற செய்திகள் பரவலாக உலா வந்தன. குறிப்பாக, தேசியக் கட்சிகளுடனோ அல்லது பிரதான திராவிடக் கட்சிகளுடனோ விஜய் கைகோர்ப்பார் என அரசியல் விமர்சகர்கள் கணித்தனர்.

ஆனால், சென்னையில் நேற்று (மார்ச் 18, புதன்) நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய் பரப்புரையை செய்து வருகிறார்கள். தவெக எந்த டீமிலும் இல்லை. மக்கள் டீமில் தான் இருக்கிறது என தெரிந்ததும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என யோசித்தனர்” என்று கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தவெக-வின் தனித்துவமான கொள்கை

மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூக நீதியில் தனது கட்சி உறுதியாக இருப்பதாக விஜய் மீண்டும் தெரிவித்துள்ளார். “அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை” என்று அவர் குறிப்பிட்டார். மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இருக்கும் வேளையில், தவெக தனித்து களம் காணத் தயாராகி வருகிறது.

2026-ல் நான்கு முனைப் போட்டி உறுதி

விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப் போட்டியை உறுதி செய்துள்ளது.

இந்த நான்கு முனைப் போட்டி, வரும் தேர்தலில் வாக்கு வங்கியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. “தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும்” என்பதில் விஜய் காட்டும் உறுதி, அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மாற்றம்’ என்ற ஒற்றைச் சொல் மாற்றத்தை கொண்டு வருமா?

தமிழ்நாடு அரசியலில் “மாற்றம்” என்ற ஒற்றைச் சொல்லுடன் களம் இறங்கியுள்ள விஜய், தனது இலக்கை நோக்கித் தெளிவாகப் பயணிப்பது தெரிகிறது. இறைவனின் அருளோடும் மக்களின் ஆதரவோடும் தனது இலக்கை அடைய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களம் விஜய்க்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *